உத்தரபிரதேசத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 60 ஆக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 58 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். உ.பி.யில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு வயது 60 ஆக இருந்தது. மத்திய அரசின் கல்வி உரிமை சட்டப்படி 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் 8ம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும். இந்த சட்டத்தை பெரும்பாலான மாநிலங்கள் இந்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளன. இலவச கல்வி சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் கூடுதலாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். உ.பி.யில் இடைநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில் கட்டாயக்கல்வி சட்டத்தை இந்த ஆண்டு முதல் அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்திருப்பதை தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களின் ஓய்வு வயதை நீட்டிக்க அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக முதல்வர் அகிலேஷ்யாதவ் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment