Sunday 16 June 2013

பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியல்: நாளை காலை வெளியீடு



            சென்னை, ஐகோர்ட் உத்தரவுப்படி, பொறியியல் கல்லூரிகளின், ரேங்க் பட்டியலை, அண்ணா பல்கலை, நாளை (17ம் தேதி) காலை, இணையதளத்தில் வெளியிடுகிறது. எனினும், இதனால், மாணவர்களுக்கு,
பெரிய அளவில் எவ்வித பலனும் கிடைக்காது என, பல்கலை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். திருப்பூரைச் சேர்ந்த பூபாலசாமி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், "கிராமப்புற மாணவர்களுக்கு, கல்லூரிகளின் தரம் பற்றி தெரிவதில்லை. கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி சதவீதத்தை வெளியிட்டால், அந்த கல்லூரியின் தரத்தைப் பற்றி, மாணவர்கள் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்" என தெரிவித்திருந்தார். இந்த வழக்கில், "பொறியியல் கல்லூரிகளின், 2011 - 12ம் ஆண்டில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறித்த விவரங்களை, 17ம் தேதிக்குள் (நாளை), அண்ணா பல்கலை, தன் இணையதளத்தில் (www.annauniv.edu) வெளியிட வேண்டும்" என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
                      
இதையடுத்து, பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி சதவீத அடிப்படையில், "ரேங்க்" பட்டியல் தயாரிக்கும் பணியில், அண்ணா பல்கலை மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பல்கலை துணைவேந்தர், ராஜாராம் கூறுகையில், "கோர்ட் உத்தரவு நகல், இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. திங்கள் கிழமை கிடைக்கும்; அதுவரை காத்திருக்காமல், கல்லூரிகளின் தேர்ச்சி சதவீத புள்ளி விவரங்களை தயாரித்து வருகிறோம். வரும் 17ம் தேதி காலை, ஐகோர்ட் உத்தரவில் தெரிவித்துள்ள முக்கிய அம்சங்களை பார்த்துவிட்டு, உடனடியாக, இணையதளத்தில், கல்லூரிகளின் விவரங்களை வெளியிட்டு விடுவோம்" என தெரிவித்தார். மாநிலம் முழுவதும், 550 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளின், 2011 - 12ம் ஆண்டு தேர்ச்சி சதவீத அடிப்படையில், பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட உள்ளது. 100 சதவீதத்தில் துவங்கி, 99, 98 என, படிப்படியாக, கல்லூரிகளின் பட்டியல், கடைசி வரை வரும்.
                  
இதுகுறித்து, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், பாலகுருசாமி கூறியதாவது: ஐகோர்ட் உத்தரவை வரவேற்கிறேன். கல்லூரிகளைப் பற்றி, எதுவுமே தெரியாத நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு, ஐகோர்ட் உத்தரவு, ஒரு, "சிக்னல்" போல் அமைந்துள்ளது. கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதத்தை வைத்து, மாணவர்கள், ஓரளவுக்கு, ஒரு முடிவுக்கு வர முடியும். குறிப்பாக, 50 சதவீதத்திற்கும் கீழ் தேர்ச்சி சதவீதம் இருக்கும் கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டாம் என, முடிவுக்கு வருவர். ஒரு ஆண்டு தேர்ச்சியை மட்டும் இல்லாமல், நான்கு ஆண்டுகளின் தேர்ச்சி சதவீத விவரங்களை வெளியிட்டால், இன்னும் நன்றாக இருக்கும். தற்போதைய உத்தரவில், தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பொறியியல் கல்லூரிகள் சேர்க்கப்படவில்லை.
                        
எனவே, அண்ணா பல்கலை கல்லூரிகள், எம்..டி., - கிண்டி பொறியியல் கல்லூரிகள் உட்பட, 50 கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதம், பட்டியலில் வராது. கோவையில் மட்டும், ஏராளமான தன்னாட்சி கல்லூரிகள் உள்ளன. அனைத்து பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதங்களையும் வெளியிட்டால், மாணவ, மாணவியருக்கு பெரிதும் உதவியாக இருக்கும். மாணவர்கள், பெற்றோர், போலி விளம்பரங்களைக் கண்டு, ஏமாந்து விடுகின்றனர். நூறு சதவீத வேலைவாய்ப்பு என, விளம்பரம் கொடுப்பர். ஆனால், உள்ளே போய் விசாரித்தால் தான், எல்லாம் பொய் என்பது தெரியவரும். எனவே, கல்லூரிகளை தேர்வு செய்யும் விவகாரத்தில், மாணவர்களும், பெற்றோரும், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு பாலகுருசாமி கூறினார்.
                  
பல்கலை வட்டாரங்கள் கூறுகையில், "வெறும் தேர்ச்சி சதவீதத்தை மட்டுமில்லாமல், வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், தரமான ஆசிரியர்கள் என, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய, "ரேங்க்" பட்டியலை வெளியிட்டால் மட்டுமே, மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வெறும், ஒரு ஆண்டு தேர்ச்சி சதவீதத்தை வைத்துக்கொண்டு, கல்லூரிகளைப் பற்றி, முழுமையாக தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை" என தெரிவித்தன
.

No comments:

Post a Comment