அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில், ஏ.ஐ.சி.டி.இ., அல்லது யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப்பட்ட பாடங்களுக்கு மட்டுமே கல்விக்கடன் வழங்கப்படும்; நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள், "கவுன்சிலிங்"கில் கட்டாயம்
பங்கேற்றிருந்தால் மட்டுமே, கல்விக்கடன் பெற தகுதியானவர்கள், என வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏழை, எளிய மற்றும் திறமையான மாணவர்கள், தங்கள் கல்வியை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பயில ஏதுவாக கல்விக்கடன் வழங்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடனை திருப்பிச் செலுத்தும் தன்மையை பொறுத்து, கடன் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. உயர்கல்விக்கான கடன் பெறும் மாணவர்கள் உரிய ஆவணங்களுடன், தங்கள் இருப்பிடத்துக்கு அருகிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விண்ணப்பிக்க வேண்டும். வங்கியில் கணக்கு வைத்திருந்தால் மட்டுமே கடன் பெறமுடியும் என்ற அவசியமில்லை; கடன் பெறும்போது கூட, புதிய கணக்கை துவங்கலாம்.
வங்கி உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: "அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில், ஏ.ஐ.சி.டி.இ., அல்லது யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப்பட்ட பாடங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படுகிறது. நிர்வாக ஒதுக்கீட்டில் இடம்பெற்ற மாணவர்கள், கவுன்சிலிங்கில் கட்டாயம் பங்கேற்றிருக்க வேண்டும். இன்ஜினியரிங் பாடங்களுக்கு கவுன்சிலிங் கட்டாயம். இந்தியாவில் படிக்க ரூ.10 லட்சம் வரையும், வெளிநாட்டு படிப்புகளுக்கு ரூ.30 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு சென்று பயில விரும்புபவர்கள், அருகிலுள்ள தலைமை வங்கி கிளைக்குச் சென்று, பயில விரும்பும் பல்கலை அங்கீகாரம் பெற்றுள்ளதா என பட்டியலை சோதிக்க வேண்டும். நான்கு லட்சம் ரூபாய் வரை பெறுபவர்களுக்கு, எவ்வித உத்தரவாதமும் தேவையில்லை. அதற்குமேல் பெறுபவர்களுக்கு உத்தரவாதம் தேவைப்படுகிறது. ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் உள்ள உயர்மதிப்பு பாடங்களுக்கு 10 சதவீதத்துக்கு மேல் வட்டி வசூலிக்கப்படுகிறது. கல்விக்கடனை குறிப்பிட்ட தவணைக்கு முன்னதாக திருப்பிச் செலுத்தினால், அபராதத் தொகை வசூலிப்பதில்லை.
பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 4.5 லட்சத்துக்கு குறைவாக இருந்தால் வட்டித்தொகை திருப்பித் தரப்படும். மாணவர் மற்றும் பெற்றோர், பான் கார்டு, பள்ளி சான்றிதழ், நன்னடத்தை சான்று, கல்லூரியில் சேர்ந்ததற்கான அத்தாட்சி, கல்வி கட்டண விவரம், ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை வங்கியில் அளிக்க வேண்டும்." இவ்வாறு, அவர் கூறினார்.
கவனமா தேர்வு செய்யுங்க...
சில வங்கிகள் கல்விக்கடன் தர மறுப்பதாக புகார் எழுகிறது. அங்கீகாரமற்ற பாடங்களையும், கல்லூரிகளையும் தேர்வுசெய்வதே, இதற்கு முக்கிய காரணம். எனவே பெற்றோரும், மாணவர்களும் நன்கு ஆலோசித்து பாடங்களை தேர்வு செய்ய வேண்டும். தவிர, உரிய ஆவணங்கள் இல்லாது, வங்கியை நாடும்போது, கடன் கிடைப்பதும் சந்தேகமே.
No comments:
Post a Comment