Thursday 20 June 2013

உலகத்தையே மாற்றக் கூடிய பெரும் சக்தி ஆசிரியர்களுக்கு உண்டு



              "உலகத்தையே மாற்றக் கூடிய பெரும் சக்தி ஆசிரியர்களுக்கு உண்டு" என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் பேசினார். கள்ளக்குறிச்சி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்வியியல்
கல்லூரியில் பி.எட்., பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் 200 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக துணை வேந்தர் விஸ்வநாதன் பேசியதாவது: "கல்வி அறிவு குறைவாக இருந்ததால் கள்ளக்குறிச்சி என்றாலே பெண் எடுக்கவும், பெண் கொடுக்கவும் மறுப்பார்கள். ஆனால் இன்று கள்ளக்குறிச்சி கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிறுவனங்களின் அபார வளர்ச்சியால் மாநில அளவிலான சாதனைக்கு வித்திட்டு வருகிறது. இலவச கட்டாயக் கல்விக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும் 26 சதவீதம் படிப்பறிவு இல்லாத நிலை கவலை அளிக்கிறது.
                     
மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். இந்த உலகத்தையே மாற்றக் கூடிய பெரும் சக்தி உங்களுக்கு உண்டு. இந்த சாதனையை ஆசிரியர்களால் தான் செய்ய முடியும். சமுதாயத்தில் ஒரு முக்கிய அங்கமாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர். கல்வி நிறுவனங்கள் பாடங்களை மட்டும் போதிப்பது இல்லை. திறமை மிகுந்தவர்களை உருவாக்கி தருவதிலும் கவனம் செலுத்துகிறது. நமக்கு வரும் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்." இவ்வாறு விஸ்நாதன் பேசினார்
.

No comments:

Post a Comment