Wednesday 27 February 2013

மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு 10 சதவீதம் பாஸ்!



             மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வில் 10.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தாலும்கூட, கடந்த தேர்வுடன் ஒப்பிடும்போது தற்போதைய தேர்ச்சி விகிதம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நடத்திய மாநில
விரிவுரையாளர் தகுதித் தேர்வை (செட்) 51,699 மாணவர்கள் எழுதினர். இதில் 5,495 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 10.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த முறை நடைபெற்ற மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வில் 41,164 பேர் தேர்வு எழுதினர். இதில் 1,396 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதாவது தேர்ச்சி விகிதம் 3.39 சதவீதம். 2002-ஆம் ஆண்டில் இத்தேர்வில் தேர்ச்சி 0.68 சதவீதம். 2004-ஆம் ஆண்டில் 0.85 சதவீதமாகவும் 2006-ஆம் ஆண்டில் 2.20 சதவீதமாகவும் 2008-ஆம் ஆண்டில 2.19 சதவீதமாகவும் தேர்ச்சி விகிதம் இருந்தது. தற்போதைய தேர்வில் கடந்த ஆண்டைவிட மூன்று மடங்கு அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
                                   பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின்படி, மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 9 சதவீதம் பேர் தேர்ச்சியடையும் மதிப்பெண்ணையே கட் ஆஃப் மதிப்பெண்களாக நிர்ணயித்து, தேர்ச்சி கணக்கிடப்படுகிறது. அதன்படி, இத்தேர்வு எழுதிய தமிழ்ப்பாட மாணவர்களில் 5,886 பேரில் 826 பேர் (14.03 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். வேதியியல் அறிவியல் பாடத்தில் 2,639 பேரில் 136 பேரும் வணிகவியல் பாடத்தில் 5,484 பேரில் 630 பேரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 6,587 பேரில் 589 பேரும் பொருளாதாரப் பாடத்தில் 2,410 பேரில் 280 பேரும் கல்வியியல் பாடத்தில் 2,164 பேரில் 264 பேரும் ஆங்கிலத்தில் 4,605 பேரில் 572 பேரும் வரலாறு பாடத்தில் 2,815 பேரில் 387 பேரும் நூலக அறிவியலில் 1,118 பேரில் 149 பேரும்  உயிர் அறிவியலில் 4,863 பேரில் 501 பேரும் மேலாண்மை பாடத்தில் 2,456 பேரில் 317 பேரும் கணிதத்தில் 4,778 பேரில் 329 பேரும் இயல் அறிவியலில் 2,638 பேரில் 125 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த முறை நடைபெற்ற மாநில விரிவுயாளர் தகுதித் தேர்வில் இயற்பியல், வேதியியல், புவியியல், கணிதம், நூலக அறிவியல் போன்ற பாடங்களில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறாத நிலை இருந்தது. தற்போது 27 பாடங்களிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
                               அரசு உதவி பெறும் கல்லூரிகளில்  3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணி இடங்களும் அரசுக் கல்லூரிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்தச் சூழ்நிலையில் செட் தேர்வில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஏற்கெனவே இத்தேர்வில் தகுதி பெற்ற பலரும் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர். இத்தேர்விலும் தகுதி பெற்று பிஎச்டி படித்துள்ள மாணவர்கள்தான் பெரும்பாலும் விரிவுரையாளர் பணியில் சேரும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
ஆயிரம் காலி இடங்கள்!
                                 தமிழ்நாட்டில் உள்ள 69 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 1063 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. முக்கியப் பாடப்பிரிவுகளில் உள்ள உத்தேசக் காலி இடங்கள் விவரம்:
தமிழ்  
76
ஆங்கிலம்
140
கணிதம்
135
இயற்பியல்
100
வேதியியல் 
95
தாவரவியல்
60
விலங்கியல்
55
கம்ப்யூட்டர் சயின்ஸ்
95
வரலாறு
77
பொருளாதாரம்
58
வணிகவியல்
75
அரசியல் அறிவியல்
5
நிர்வாகவியல்
8
புள்ளியியல்
18

No comments:

Post a Comment