Monday 25 February 2013

ஆசிரியர் குறைதீர்க்கும் கூட்டம் எப்போது?



                               மதுரையில், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவுப்படி, மாதம்தோறும் நடக்கும் ஆசிரியர் குறைதீர்க்கும் கூட்டம், மாநகராட்சி பள்ளிகளில் மட்டும் நடத்தபடாததால் ஆசிரியர்கள் குமுறுகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், அரசு மற்றும் உதவி பெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், ஆசிரியர்களுக்கான
குறைதீர்க் கூட்டங்கள் நடத்த உத்தரவிடப்பட்டது. சில மாதங்களுக்கு முன், மாதத்தில் முதல் சனிக்கிழமையன்று இக்கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது. இந்த நடைமுறை, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் உள்ள நிலையில், மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை ஒருமுறை கூட கூட்டம் நடக்கவில்லை. இதனால், ஆசிரியர்களின் சேமநல நிதி பெறுதல், சரண்டர், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை பிரச்னைகளுக்கு தீர்வு, ஊதிய குழுவில் உள்ள முரண்பாடுகளை சரிசெய்தல் போன்ற பிரச்னைகளை, உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
                             தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் முத்துக்குமார், பொருளாளர் தென்னவன், முன்னாள் நிர்வாகி சகாதேவன் கூறுகையில், "மாநகராட்சி கமிஷனர், துணை கமிஷனர், கல்வி அதிகாரியிடம் மனு கொடுத்தோம். குறைதீர்க் கூட்டம் நடத்தினால், 28 தொடக்க பள்ளி, 152 இடைநிலை, 240 பட்டதாரி, 151 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட 900 ஆசிரியர்கள் பயனடைவர்," என்றனர். மாநகராட்சி கல்வி அதிகாரி கூறுகையில், "அடுத்த மாதம் முதல் வாரத்தில் சனிக்கிழமைதோறும் ஆசிரியர்கள் குறைதீர்க் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

No comments:

Post a Comment