Wednesday 27 February 2013

கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு வரப்போகுது "ஸ்கைப்" வசதி



         கோவை மாநகராட்சியில், ஐந்து மண்டலத்தில் தலா ஒரு பள்ளியை தேர்வு செய்து, "ஸ்கைப் கால்" மற்றும் "டிஜிட்டல் ஸ்டோரி" திட்டத்தை நடைமுறைபடுத்த மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி மற்றும் "அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் டிஜிட்டல் ஈகுவலைசர் புரோகிராம்" இணைந்து, மாநகராட்சி பள்ளி
மாணவர்களுக்கு, அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கிறது. இரண்டாம் கட்டமாக, சமச்சீர் கல்வி திட்டத்தில் குறிப்பிட்ட பாடங்களை, "டிஜிட்டலைஸ்" முறையில், மாணவர்களுக்கு கற்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
                                 
இதற்கான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம், ஒவ்வொரு பாடத்திலும் குறிப்பிட்ட தலைப்புகள் "டிஜிட்டல்' முறையில் போதிக்கப்பட்டன. கோவை மாநகராட்சியில், கடந்தாண்டு மே 31ம் தேதி, இத்திட்டம் துவங்கப்பட்டது. ஓராண்டு நிறைவடையும் நிலையில், திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், கம்ப்யூட்டர் மயமான செயல்வழி கற்றல் பாடத்திட்டம் பற்றி பாடவாரியாக ஆசிரியர்கள் விளக்கமளித்தனர். மாநகராட்சி காதுகேளாதோர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சண்முகப்பிரியா, யோக விக்னேஷ் ஆகியோர், சமூக அறிவியல் பாடத்தின் கணினி முறையை சைகை மொழியில் விளக்கினர். அதன்பின், ரத்தினபுரி பள்ளி ஆசிரியர்களுடன் "ஸ்கைப் கால்" மூலம் மேயர், திட்ட இயக்குனர், மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சிவராசு, ஆகியோர் கலந்துரையாடினர்.
                                
திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர் பேசும்போது, "இத்திட்டத்துக்காக, பள்ளிகளில் ஐடி கிளப் துவங்கப்பட்டு, தகவல் தொடர்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பணக்கார வீதி பள்ளி மாணவர்கள் "ஸ்கைப் கால்" மூலம் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுடன் பேசினர். மாநகராட்சியில் 6 முதல் 9ம் வகுப்பு வரையான 313 ஆசிரியர்களில், 305 பேரும்; மாணவர்கள் 7876 பேரில், 6277 பேரும்; கிரியேட்டிவிட்டி திட்டத்தில் 2459 மாணவர்களும்; மாணவர் பயிற்றுனர்களாக 386 பேரும் பயிற்சி பெற்றுள்ளனர், என்றார். ஆசிரியர்கள் பேசுகையில், "ஸ்கைப் கால் முறையில் கற்றல், கற்பித்தல் எளிதாக உள்ளது; மாணவர்களின் கவனச்சிதறல் குறைந்து, புரிந்து கொள்ளும் தன்மை அதிகரித்துள்ளது; ஆடியோ, வீடியோ படத்துடன் பாடங்களை விளக்கும் போது மனதில் ஆழமாக பதிகிறது" என்றனர்.
                          
இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ள ஐந்து பள்ளிகள், இன்னும் இறுதி செய்யப்படவில்லை. மாணவர்களின் கல்வியறிவு, வெளியுலக தொடர்புகளை விரிவாக்க உதவும் "ஸ்கைப் கால்' திட்டம் புதுமையானது. மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில், "டிஜிட்டல் ஸ்டோரி" தயாரித்து, "ஸ்கைப் கால்" மூலம் கலந்துரையாடலாம். தாங்கள் பயிலும் பள்ளியிலிருந்தபடியே, வீடியோ அல்லது ஆடியோ வழியாக, எந்த கல்வி நிறுவனங்களையும் தொடர்பு கொள்ளலாம். தங்களது படைப்புகளை, டிஜிட்டல் முறையில் எங்கு வேண்டுமானாலும் சமர்ப்பிக்க முடியும். அதேபோல்,பிறரும் கருத்துகளை பரிமாறிக் கொள்ள, "ஸ்கைப் கால்" வழிகோலுகிறது. திட்ட இயக்குனர் சுந்தரகிருஷ்ணன் பேசுகையில், "பயிற்றுனர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர்களின் கல்வி அறிவு, வெளியுலக அறிவை விரிவுபடுத்த திட்டம் துவங்கப்பட்டது.
                                
ஆசிரியர்களின் வேலைப்பளு குறைந்து, மாணவர்களின் அறிவு திறன் மேம்படும். காதுகேளாத, வாய் பேச முடியாத மாணவர்களுக்கு மாநகராட்சி "டேப்லெட்" வழங்குகிறது. அதில், பாடங்களை ஆசிரியர்கள் சைகை மொழியில் விளக்கம் கொடுப்பதை பதிவு செய்து கொடுக்கப்படும். இந்தியாவில் முதல்முறையாக கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு "டேப்லெட்" வழங்கப்படுகிறது. "ஸ்கைப் கால்" மூலம் கலந்துரையாடும் தன்மை வரும் என்றார்
.

No comments:

Post a Comment