Tuesday 26 February 2013

C-20 successfully fired in space | இந்தியாவின் 101வது ராக்கெட் பிஎஸ்எல்வி , சி20 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது



                நிலம், நீர் தட்பவெப்பம், கடல் பாதுகாப்புக்காக ஏவப்பட்ட இந்தியாவின் 101வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி சி,20 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 6 நாடுகளின் 7 செயற்கைக்கோள்களை 22வது நிமிடத்தில் பூமியின்
சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தியது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராக்கெட் செலுத்தப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார். இஸ்ரோ சார்பில் பி.எஸ்.எல்.வி சி,20 ராக்கெட் நேற்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி நிலையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டில் இந்திய பிரான்ஸ் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 409 கிலோ எடையுள்ள சரள், கனடா நாட்டின் 148 கிலோ எடையுள்ள சபையர், 74 கிலோ எடையுள்ள நியோசாட், ஆஸ்ட்ரியா நாட்டின் வியன்னா பல்கலைக்கழகத்தின் 14 கிலோ எடையுள்ள என்.எல்.எஸ்,8.1, தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் 14 கிலோ எடையுள்ள என்.எல்.எஸ் 8.2, டென்மார்க் நாட்டின் ஆல்பார்க் பல்கலைக்கழகத்தின் 3 கிலோ எடையுள்ள என்.எல்.எஸ் 8.3 அமெரிக்காவின் 6.5 கிலோ எடையுள்ள ஸ்டிராண்ட்,1 ஆகிய 7 செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டன.
                               
ராக்கெட் செலுத்துவதற்கான 59 மணி நேர கவுன்ட் டவுன் கடந்த 23ம் தேதி காலை 6.56க்கு தொடங்கியது. தொடர்ந்து முதல் கட்ட பரிசோதனைகள், இரண்டாம் கட்ட பரிசோதனைகள் நடைபெற்றன. கவுன்ட் டவுன் நேற்று மாலை 6.01 க்கு நிறைவு பெற்றதுஇதையடுத்து பி.எஸ்.எல்.வி சி,20 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தீ பிழம்புகளை கக்கியபடி ராக்கெட் கிளம்பியதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆந்திர கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மத்திய அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பார்வையிட்டனர். ராக்கெட் புறப்பட்ட 113வது விநாடியில் முதல் உந்து இன்ஜின் ராக்கெட்டிலிருந்து பிரிந்தது. 265 வது நொடியில் 2வது இன்ஜினும், 520வது நொடியில் 3வது இன்ஜினும், ராக்கெட்டை முன்னோக்கி செலுத்தி விட்டு ராக்கெட்டிலிருந்து பிரிந்தனஇதையடுத்து 18வது நிமிடத்தில் சரள் செயற்கை கோள் ராக்கெட்டிலிருந்து பிரிந்து பூமியிலிருந்து 789 வது கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மற்ற 6 செயற்கை கோள்களும் 4 நிமிட இடைவெளியில் நிலை நிறுத்தப்பட்டன. விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட இந்த ராக்கெட் பி.எஸ்.எல்.வி யின் 23வது ராக் கெட்டா கும். பிஎஸ்எல்வி சி 20 ராக்கெட் 5.56க்கு ஏவப் படும் என்று ஏற்கனவே திட்டமிடப்பட்டது. பருவ நிலை மாற்றம் காரணமாக 5 நிமிடம் தாமதமாக 6.01க்கு ஏவப்பட்டது.
விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு
                                    
ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டு சில நொடிகளில் மக்கள் கண்களை விட்டு வானில் மறைந்தது. அதற்கு பிறகு ராக்கெட் செல்லும் திசை குறித்து விண்வெளி ஆய்வு நிலையத்தின் அரங்கில் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது. அரங்கில் குவிந்திருந்த விஞ்ஞானிகளும், விஞ்ஞானிகளின் உறவினர்களும் ராக்கெட் ஒவ்வொரு கட்டமாக வெற்றிகரமாக முன்னேறி செல்வதை பார்த்து கைத்தட்டி வரவேற்றனர்செயற்கை கோள்கள் நிலை நிறுத்தப்பட்டபோது எழுந்து நின்று எல்லோரும் உற்சாகமாக கைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதையொட்டி விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கை குலுக்கி பாராட்டு தெரிவித்தார். ராக்கெட் வெற்றி பெற்றது இந்திய விண்வெளி வரலாற்றில் மற்றொரு சகாப்தம் என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்
.

No comments:

Post a Comment