Saturday 16 February 2013

குரூப்-1 தேர்வு: கஷ்டமா? எளிதா? தேர்வர்கள் மாறுபட்ட கருத்து



             தமிழகம் முழுவதும், 352 மையங்களில் நேற்று நடைபெற்ற குரூப்-1 தேர்வு எளிதாக இருந்ததாக, பெண் தேர்வர்களும், ரொம்ப கஷ்டம் என, ஆண் தேர்வர்களும், கருத்து தெரிவித்தனர். டி.எஸ்.பி., ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட நிலைகளில், 25 காலி
பணியிடங்களை நிரப்ப, குரூப்-1 போட்டித் தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று நடத்தியது. 352 மையங்களில் நடந்த தேர்வில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு, குரூப்-2 கேள்வித்தாள், முன்கூட்டியே, வெளியான விவகாரம், பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியதால், தேர்வு மையங்களுக்கு, மிக பாதுகாப்புடன், கேள்வித்தாள் சென்றடைய, தேர்வாணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
                              
காலை 10:00 மணி முதல், பிற்பகல், 1:00 மணி வரை, தேர்வு நடந்தது.தேர்வு நடந்த அனைத்து மையங்களிலும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வீடியோ காமிரா மூலம், தேர்வு அறைகள், படம் பிடிக்கப்பட்டன. மேலும், குறிப்பிட்ட மையங்களை, வெப் காமிரா மூலம், சென்னையில் இருந்தபடி, அதிகாரிகள் கண்காணித்தனர். தேர்வாணைய தலைவர் நடராஜ், செயலர் விஜயகுமார், சென்னையில், சில மையங்களுக்குச் சென்று, தேர்வுப் பணிகளை பார்வையிட்டனர்.

                              இதுகுறித்து நிருபர்களிடம் நடராஜ் கூறுகையில்,"தேர்வு முடிவு, மார்ச் மாதம் வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, மே மாதம், மெயின் தேர்வு நடக்கும். ஆகஸ்ட்டில், நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அதன்பின், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும். தற்போதுள்ள, 25 காலி பணியிடங்கள், 50 வரை உயர வாய்ப்புகள் உள்ளன  என, தெரிவித்தார். சென்னை, திருவல்லிக்கேணி, இந்து மேல்நிலைப் பள்ளியில், ஏராளமான தேர்வர்கள், தேர்வு எழுதினர். வியாசர்பாடி, பாரதி நகரைச் சேர்ந்த, சகி கூறுகையில், "தேர்வு, எளிதாக இருந்தது. கணிதம், அறிவியலில் இருந்து, அதிகமான கேள்விகள் கேட்டிருந்தனர். நன்றாக எழுதி உள்ளேன்  என, உற்சாகத்துடன் கூறினார். மேலும் சில பெண் தேர்வர்கள், இதே கருத்துக்களை தெரிவித்தனர்.
                         
ஆனால், ஆண் தேர்வர்களில், பெரும்பாலானோர், ரொம்ப கஷ்டம் என, தெரிவித்தனர். அரக்கோணத்தைச் சேர்ந்த கோபி கூறியதாவது: நான்கு விடைகளை கொடுத்து, ஒன்று மட்டும் சரி, ஒன்றும் மூன்றும் சரி, இரண்டு மட்டும் சரி என்ற வகையிலான கேள்விகளை, அதிகளவில் கொடுத்திருந்தனர். குரூப்-2 தேர்விலும், இதே வகையிலான கேள்விகள் வரும். அதில், இரு விடைகள் தெரிந்தாலே, சரியான விடையை கண்டுபிடித்து விடலாம். ஆனால், இந்த தேர்வில், மூன்று விஷயங்களை சரியாக கண்டுபிடித்தால் தான், கேள்விக்குரிய விடையை கண்டுபிடிக்க முடியும் என்ற அளவில் இருந்தது. இதனால், தடுமாறிவிட்டோம்.மேலும், தமிழ் இலக்கியத்தில் இருந்து, ஒற்றை இலக்கத்தில் தான், கேள்விகள் வந்தன. கணிதம், அறிவியலில் இருந்தே, அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. மொத்தத்தில், ரொம்ப கஷ்டம். இவ்வாறு கோபி தெரிவித்தார். கொரட்டூரைச் சேர்ந்த விஜய் கூறுகையில்,"மிகவும் கடினமாக இருந்தது. விரைந்து பதிலை கண்டுபிடிக்க முடியாதபடி, கேள்விகள் இருந்தன. நன்றாக சிந்தித்தாலே, பதில் கிடைக்கும் வகையில், கேள்விகள் இருந்தன" என்றார்
.

No comments:

Post a Comment