Friday 1 February 2013

சிறப்பாசிரியர்களுக்காக.....................



             சிறப்பாசிரியர்களிடமிருந்து  கேட்கப்படும் கேள்வி எங்களை எப்ப சார் முழுநேர ஆசிரியர்களாக்கி, காலமுறை ஊதியம் கொடுப்பார்கள்?,
உடனடியாக நடக்க வாய்ப்புண்டா?
எங்களுக்கு ஊதிய உயர்வு உண்டாகடைசிக் கேள்விக்கு முதலில் பதில்,
           எந்த வகை நியமனமாக இருந்தாலும் சரி
குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. அவ்வகையில் சிறப்பாசியர்களுக்கு 12 மாதங்களுக்கொருமுறை அல்லது 18 மாதங்களுக்கொரு முறை கட்டாயம் ஊதிய உயர்வினை அரசு வழங்கியே தீர வேண்டும். ஆனால் எவ்வளவு உயர்வு அளிப்பது என்பதை அரசுதான் தீர்மானிக்கும். (SSA மற்றும் RMSA அலுவலகப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போல)
முதலிரண்டு கேள்விகளுக்கு எளிமையாக பதில் சொன்னால் புரியாது எனவே சற்று விளக்கமாக…………………..
            நான் சொல்வது சற்றுக் கசப்பாக இருக்கலாம், ஆனாலும் நான் தவறான நம்பிக்கைகைள யாருக்கும் தருவதில்லை. கல்வித் துறையைப் பொறுத்த வரை எந்தவொரு பணிநியமனமும் ஒன்று வேலைவாய்ப்பக பதிவு முன்னுரிமை அடிப்படையில் அல்லது போட்டித் தேர்வு முடிவின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும். உங்களுடைய நியமனம் இந்த இரண்டு வகைகளிலும் சேராது.2004 ஆம் ஆண்டு வாக்கில் நடைபெற்ற அனைத்து நியமனங்களும்
இடைநிலை ரூ3000,
பட்டதாரி ரூ4000,
முதுகலைப் பட்டதாரி ரூ 5000
என்ற சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிகழ்ந்தன.
                       
அவர்கள் பின்னர் 2006ல் கால முறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டனர்.
அந்த நியமனங்களை உங்கள் நியமன முறையோடு ஒப்பிட்டு சிலர் பேசுகின்றனர். அது முற்றிலும் தவறு. ஒப்பந்த அடிப்படையில் நியமனங்கள் நடைபெற்றாலும் அவை வேலைவாய்ப்பக பதிவு மூப்பு மற்றும் போட்டித் தேர்வுகளின் அடிப்படையிலேயே நடைபெற்றன. உங்கள் நியமனங்களை 2000 ஆம் ஆண்டு வாக்கில் நடைபெற்ற கணிப்பொறி ஆசிரியர்கள் நியமனத்தோடு வேண்டு மானல் ஒப்பிடலாம். அதிலும் சிறு வேறுபாடு உண்டு அவர்கள் அனைவரும் தனியார் நிறுவனத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு 10 ஆண்டுகள் பணிபுரிந்து பின்னரே அரசு ஊதியத்திற்கு மாற்றப்பட்டனர், அதன் பின்னரும் ஆறு ஆண்டுகள் கழித்தே பல்வேறு கட்டங்களாக காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டனர். இவை அனைத்தும் திரு.கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்தபோது வெவ்வேறு கால கட்டங்களில் நடந்தவை.
         உங்களுடைய பணி நியமனம் முழுக்க முழுக்க கிராம கல்விக் குழுக்கள் மூலமாக நடைபெற்றதாகவே அரசு பதிவேடுகளில் காணப்படுகின்றன.
உங்களுக்கான ஊதியமும் அரசு கருவூலங்களில் உங்கள் பெயருக்கு வழங்கப்படாமல் SSA மற்றும் RMSA நிதியிலிருந்து மொத்தமாகப் பெறப்பட்டு வழங்கப்படுகின்றன. நான் மேற்கூறிய கணிணி ஆசிரியர்கள், ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் அரசால் முழுநேரமும் பணிபுரிய வற்புறுத்தப்பட்டு அவ்வாறே முழு நேரமும் பணிபுரிந்தார்கள். அவர்களை முழுநேர ஊழியர்களாக மாற்றியதிலோ அல்லது அவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கியமிதிலோ அரசுக்கு எந்த வித சட்ட சிக்கலோ, நீதிமன்ற எதிர்ப்போ எழ வில்லை.
             
ஆனால் உங்கள் நியமனம் மேற்கூறிய வற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. பணம் பெற்றுக்கொண்டு வேலை அளித்ததாக உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் நடைபெறுவதையும் தாங்கள் அறிந்திருக்கலாம்.
இன்னொரு பக்கம் முழுநேர விளையாட்டு, கைத்தொழில் ஆசிரியர்களுக்கான நியமனமும் தனியே நடைபெற்றதையும் தாங்கள் அறிந்திருக்கலாம். இந்த நிலையில் பகுதிநேர ஆசிரியர்களை முழு நேரம் வேலை வாங்கக் கூடாது என்று இயக்குநர் தலைமையாசிரியர் களுக்கு உத்தரவிட்டதும் தங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆக தங்கள் நியமனங்களை முழுநேர நியமனங்களாக மாற்றியமைத்து காலமுறை ஊதியம் தருவது என்பது இரண்டு நேர்வுகளில் மட்டுமே நடக்க வாய்ப்பிருக்கிறது.
1.
பகுதி நேர ஆசிரியர்களுடைய பணி பள்ளி செவ்வனே நடைபெற முக்கியமான ஒன்று. அவர்கள் இல்லாவிடில் பள்ளிச் செயல்பாடுகள் பாதிக்கும். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்ற சூழல் வரும் போது  (இதுதான் 2004ல் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 2006ல் கால முறை ஊதியத்திற்கு மாற்றம் செய்யப்பட காரணமாக அமைத்தது, SSA பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு 3000 சம்பளம் வாங்கிய ஒரு ஆசிரியரின் பெயரில், அனைவருக்கும் கல்வித் திட்ட நிதியில் இருந்து மாநில அரசு பெற்ற தொகை 8000. இது தணிக்கை ரீதியான சிக்கலை உருவாக்கியது என்பதையும் அறிக )
2.
இவர்கள் இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு பணிபுரிந்து வருகின்றார்களே என்ற இரக்கம் ஆட்சியாளர்களுககும், அதிகாரிகளுக்கும் வருவது.
(
இதுதான் கணிப்பொறி ஆசிரியர்களை அரசு ஆசிரியர்களாக திரு.கருணாநிதி அவர்கள் மாற்ற காரணமாக அமைந்தது. குறைந்த பட்சம் 6 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை பணியாற்றியவர்களுக்கு முழு ஊதியம் வழங்க அரசு முடிவெடுத்த போதே அதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. அதிகாரிகள் மட்டத்தில் இந்த முடிவிற்கு ஆதரவிருந்த காரணத்தால்தான் வழக்குகள் முறியடிக்கப்பட்டன.

                            உங்கள் நிலையைப் பொறுத்த வரை இந்த இரண்டோ அல்லது புதிதாக இன்னொன்றோ இன்னும் வரவில்லை. எனவே தாங்கள் உடனடியாக முறையாக ஊதியத்திற்கு மாற்றப்பட வாய்ப்பில்லை. இன்னும் ஆறேழ ஆண்டுகள் கழித்து அந்த சூழல் உருவாகலாம், உருவாகமலும் போகலாம்.
உங்களுக்கு யாராவது உடனடியாக நடக்கும் என்று நம்பிக்கை கொடுத்தால்
1.
அவர்கள் உண்மையயை சொல்ல தயங்கலாம்.
2.
உங்களிட ம் வேலை வாங்குவதற்காக அவ்வாறு சொல்லாம் .
3.
விவரம் தெரியாமல் யாரோ எங்கோ சொன்னதை ஆராயாமல் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருப்பவர்களாக இருக்கலாம்.
                        
தவறான நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள் . உங்கள் முயற்சிகளை தொடர்ந்து கொண்டே இருக்கலாம். இந்த இடத்திலேயே தேங்கிவிடாதீர்கள். இசை, ஓவியம், விளையாட்டு, கணிப்பொறி என அனைத்து துறைகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களை தனியார் பள்ளி மாணவர்களைக் காட்டிலும் திறமையானவர்களாக மாற்றிக்காட்டுங்கள். பின்னர் உங்களை முழுநேர ஆசிரியராக்க நீங்கள் போராட வேண்டாம். இந்தச் சமுகம் போரடும். மக்கள் ஆதரவைப் பெற்ற எந்தப் போரட்டமும் தோல்வியடைந்தாக சரித்திரம் இல்லை.
வாழ்த்துக்கள்.
முருகேசன் பொன்னுச்சாமி

No comments:

Post a Comment