Thursday 21 February 2013

பிளஸ் 2 தேர்வு - சிறப்பான ஏற்பாடுகளை செய்ய அமைச்சர் உத்தரவு



           பிளஸ் 2 தேர்வில் எவ்வித குளறுபடியும் இன்றி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்" என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் சிவபதி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச் 1ம் தேதி துவங்குகின்றன. 8.50 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். கடந்தாண்டு, 1,500 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இத்தாண்டு, 2,000 மையங்களில் தேர்வு நடத்த ஏற்பாடுகள்
செய்யப்பட்டு உள்ளன. சமீபத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், அமைச்சர் சிவபதி, "பிளஸ் 2 தேர்வில், எவ்வித குளறுபடிகளும் இன்றி, மாணவர்களின் நலன் பாதிப்பின்றி, தேர்வுகள் நடைபெற வேண்டும் ' என அறிவுறுத்தி உள்ளார்.
                      இதுகுறித்து, தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தாண்டு, 8.50 லட்சம் மாணவர்கள், தேர்வு எழுத தயாராக உள்ளனர். தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய வினாத்தாள், தேர்வு நெருங்கும் நேரத்தில், அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுதுவதற்கு வசதியாக, தேர்வு மையங்கள், அதிகரிக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையத்திற்கு அனுமதி கேட்டு, ஏராளமான பள்ளிகள், விண்ணப்பத்திருந்தன.
                                     
அதில், 2,000 பள்ளிகளில், தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கண்காணிப்பு பணியில், பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுவர். 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவர். கண்டறியப்பட்டுள்ள பிரச்னைக்குரிய தேர்வு மையங்களில், தேர்வு முடியும் வரை, அந்த சமயத்தில், "ஸ்டேண்டிங் ஸ்குவாட்" அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். ஒரு மாவட்டத்திற்கு குறைந்தபட்சம், 30 முதல் 40 பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன.
                       தனியார் பள்ளிகள், மாணவர்களை, "பிட்" அடிக்க உதவி செய்வதாக, புகார்கள் வந்துள்ளன. அந்த பள்ளிகள் மீது, அதிக கவனம் செலுத்தப்படும். மாணவர்கள், "பிட்" அடித்து சிக்கினால், அவர்கள் மீண்டும் தேர்வு எழுத முடியாது. மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர, முக்கிய பாடமாக கருதப்படும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாட தேர்வின் போது, அண்ணா பல்கலை ஆசிரியர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment